பெரிய நடிகர்கள் நடித்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் சில படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் நொந்துபோன தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளனர். இது தமிழ் திரையுலகில் அல்ல ; மலையாள திரையுலகில்! மலையாள படவுலகிற்கு கடந்த சில வருடங்களில் மட்டும் ரூ.150 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இதுபோன்று நஷ்டம் ஏற்படாமல் தடுப்பது குறித்து முடிவு எடுப்பதற்கான படஅதிபர்களின் ஆலோசனை கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும, மலையாள நடிகர் சங்கத்தை (அம்மா) சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இருதரப்பினரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர்.
இதையடுத்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி ரூ.3 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் - நடிகைகளுக்கு சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைப்பது என்றும், பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிப்பவர்கள் ரூ.3.5 கோடிக்குள் படத்தை தயாரித்து முடித்துவிட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பட்ஜெட் ரூ.3.5 கோடியை தாண்டக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவுகள் குறித்து தயாரிப்பாளர்கள் பலரும் நிம்மதி தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சாபு செரியன் கூறுகையில், ``இப்போதெல்லாம் பட தயாரிப்பு செலவில் 60 சதவீதம் நடிகர்களின் சம்பளத்துக்கு போய்விடுகிறது. மீதி 40 சதவீத பட்ஜெட்டில்தான் படத்தை தயாரிக்க வேண்டியிருக்கிறது. இப்போது எடுக்கப்பட்டுள்ள சம்பள குறைப்பு நடவடிக்கை, தயாரிப்பாளர்களுக்கு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது'' என்றார்.
இதற்கிடையில் மலையாள நடிகர் - நடிகைகள் டி.வி., நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பான முழு அறிக்கையை விரைவில் வெளியிடவும் நடிகர் சங்கம் முடிவு செய்திருக்கிறதாம்.
Photos
Listing1-1of1
External Links
Not Available
What people think about "நடிகர் - நடிகைகளுக்கு 25 சதவீத சம்பளம் குறைப்பு!" ?