Madurai Guide
Quick Search :
What's Hot?
Main Menu
3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் -அரசுக்கு ரூ. 67,719 கோடி லாபம்

செல்போன் நிறுவனங்களுக்கு இடையே மிக மிகக் கடுமையான போட்டி நிலவிய 3ஜி ஸ்பெக்ட்ரம் (Third Generation Spectrum) ஒதுக்கீட்டு ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 67,719 கோடி கிடைத்துள்ளது.

செல்போனில் வீடியோவுடன் கூடிய உரையாடல், டிவி செய்திகள்,​​ திரைப்படங்களைக் காண உதவும் அடுத்தகட்ட தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா நுழைகிறது.

இதற்கான அதிவிரைவான வயர்லெஸ் சேவையான 3ஜி அலைவரிசையைப் (ஸ்பெக்ட்ரம்) பெற இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், முதலில் வருபவர்களுக்கு முதலில் என்று சினிமா டிக்கெட் விற்பது போல, அலைவரிசைகள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு சர்ச்சையானதால், இம்முறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசு மிக கவனமாக அடி எடுத்து வைத்தது.

முழுக்க முழுக்க திறந்த ஏலம் மூலம் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. அலைவரியைப் பெற ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு பெரும் தொகையை தர முன் வந்ததால் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.

கிட்டத்தட்ட 183 சுற்றுகளாக கடந்த 34 நாட்களாக ஏலம் நடந்து வந்தது. இதில் 9 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன.

இறுதியில் நாடு முழுவதற்குமான 3ஜி ஸ்பெக்ட்ரம் ரூ. 67,719 கோடி அளவுக்கு விலை போயுள்ளது. இந்த ஏலம் மூலம் ரூ. 35,000 கோடி தான் கிடைக்கும் என முதலில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், போட்டி மற்றும் முறையான ஏலம் மூலம் ரூ. 67,719 கோடி குவிந்துள்ளது. இதன்மூலம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பற்றாக்குறையில் கிட்டத்தட்ட 1 சதவீதத்தை மத்திய அரசு பூர்த்தி செய்துவிட முடியும்.

3ஜி அலைவரிச்சைக்குத் தேவையான ஸ்பெக்ட்ரம் மத்திய அரசிடம் இல்லை. இதனால் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைவரிசை வாங்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இருப்பது மிகக் குறைவான ஸ்பெக்ட்ரம் தான் என்பதால், இப்போது அதை வாங்காவிட்டால் எதிர்காலத்தில் அது கிடைப்பது சிரமம் என்பதால் நிறுவனங்கள் பணத்தைக் கொட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் இந்தியாவி்ன் 13 மண்டலங்களுக்கான 3ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் வாங்கியுள்ளது. இதற்காக 12,295.46 கோடியை செலுத்தியுள்ளது. ஏலத் தொகையும் போட்டியும் மிகக் கடுமையா இருந்ததால் நாடு முழுவதும் உள்ள அனைத்து 22 மண்டலங்களுக்குமான ஸ்பெக்ட்ரத்தை வாங்க அந்த நிறுவனத்தால் முடியவில்லை.

இதனால் நாடு முழுவதும் 3ஜி சேவையை வழங்க இந்த நிறுவனத்தால் முடியாது. பிற நிறுவனங்களுடன் இணைந்து தான் இந்தச் சேவையை அளிக்க முடியும். இதே நிலை தான மற்ற எல்லா தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. எந்த நிறுவனத்தாலும் நாடு முழுவதற்குமான 3ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்க முடியவில்லை.

வோடபோன் எஸ்ஸார் நிறுவனம் 9 மண்டலங்களுக்கான 3ஜி அலைவரிசையை ரூ. 11,617.86 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

ரிலையன்ஸ் செல்போன் நிறுவனம் 13 மண்டல்களுக்கான ஸ்பெக்ட்ரத்தை வாங்க ரூ. 8,585.07 செலுத்தியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனம் ரூ. 6,499.5 கோடி தந்து 13 மண்டலங்களையும், டாடா டோகோமோ நிறுவனம் ரூ. 5,864.3 கோடி தந்து 9 மண்டலங்களையும், ஐடியா செல்லுலார் நிறுவனம் 11 மண்டலங்களை ரூ. 5,768.6 கோடி தந்தும், எஸ் டெல் நிறுவனம் 3 மண்டலங்களை ரூ. 337.7 கோடி கொடுத்தும் வாங்கியுள்ளன.

முக்கிய மண்டலங்களான டெல்லியை எர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஆகியவையும், மும்பையை ரிலையன்ஸ், வோடபோன், ஏர்டெல் ஆகியவையும், கர்நாடகத்தை டாடா, ஏர்செல், ஏர்டெல் ஆகியவையும், தமிழ்நாடு மண்டலத்தை ஏர்செல், வோடபோன், ஏர்செல் ஆகியவையும், ஆந்திராவை ஏர்செல், ஐடியா செல்லுலார், ஏர்டெல் ஆகியவையும் வாங்கியுள்ளன.

ஏலம் முடிந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுவிட்டால் செல்போன்களில் 3 ஜி சேவைகளை இந்த நிறுவனங்கள் ஆண்டு இறுதியில் அமலுக்குக் கொண்டு வரும் என்று தெரிகிறது.

இதற்காக தங்கள் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் டவர்களையும் முதலில் இந்த நிறுவனங்கள் மேம்படுத்தியாக வேண்டும்.

இந்த 3ஜி பிராட்பேண்ட் சேவை வந்துவிட்டால் அதன் பலனை அனுபவிக்க நாமும் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யும் உயர் தொழில்நுட்பம் கொண்ட 3ஜி செல்போன்களை வாங்க வேண்டி வரும். இந்த செல்போன்கள் மூலம் எதிர்தரப்பில் போசுவோரை ஸ்கீரினில் நேரில் பார்த்தபடியே பேச முடியும்.

Photos
Listing    1 - 1 of 1  
External Links
Not Available
What people think about  "3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் -அரசுக்கு ரூ. 67,719 கோடி லாபம்" ?
No public opinions yet.
Login to say your opinion about "3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் -அரசுக்கு ரூ. 67,719 கோடி லாபம்"