ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர, இனி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலாண்மைக் கல்வி வழங்குவதில் நாட்டின் புகழ்பெற்ற ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் இந்த புதிய விதியை அதிரடியாக அறிவித்துள்ளன. இதன்படி, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர, கணக்கில் கொள்ளப்படும் 100 மதிப்பெண்களில், 75 பொது நுழைவு (கேட்) தேர்வில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 25 மதிப்பெண்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 95 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா 10 (முழு) மதிப்பெண் வழங்கப்படுகிறது. 90 சதவீதத்திற்கு மேல் பெற்றிருந்தால் 8 மதிப்பெண்களும், 85 - 90 சதவீதம் பெற்றிருந்தால் 6 மதிப்பெண்களும், 80-85 மதிப்பெண் பெற்றிருந்தால் 4 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. பணி அனுபவத்திற்கு ஐந்து மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின்படி, கேட் தேர்வில் மட்டுமே அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகின்றன. எனவே, இனி ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர வேண்டுமானால், பள்ளித் தேர்வில் இருந்தே அதிக மதிப்பெண் பெற வேண்டுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது. |