சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 97.11 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வை சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 56,245 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவு, கோவா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான் உள்ளிட்ட 10 மாநிலங்கள் அடக்கம்.
இந்த மண்டலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 92.17 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை உள்பட அனைத்து நகரங்களையும் சேர்த்து 97.11 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். வழக்கம்போல் மாணவிகளே அதிக அளவி்ல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவிகள் மாணவிகள் ஸ்வாதி புருஷ்டி, ஆர். காயத்ரி ஆகியோர் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையத் தளங்களில் தங்கள் பெயர், இ-மெயில் முகவரியை பதிவு செய்து கொண்டு, இ-மெயில் முகவரியில் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
இதேபோல பள்ளிகள் மேற்கண்ட இணையத் தளங்களில் தங்கள் பள்ளியின் `கோட்' எண்ணை, இ-மெயில் முகவரியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
நாட்டின் இதர பகுதிகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள், 21ம் தேதி வெளியாகின்றன. |